தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த தெய்வ சாந்தி என்பவரின் மகன் இசக்கிராஜா என்ற கிறிஸ்துராஜா (46). இவர் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இசக்கிராஜா தனது மோட்டார் பைக்கில் முத்தையாபுரத்திற்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடியை நோக்கிப் பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யா நகர் அருகே பைக் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் பைக் பலமாக மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட இசக்கி ராஜாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்ட அருகிலிருந்தவர்கள், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.