விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது.

அப்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த சேகர் மகன் சுபாஷ் (22) மற்றும் தென்காசி மாவட்டம் வீரணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (21) ஆகிய இருவரும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகச் சாலையில் நடனம் ஆடிக்கொண்டே வந்துள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைக் கண்டித்து, முறைப்படுத்திச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரை ஏளனமாகப் பேசி, அவதூறான வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.