» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமமுக எம்எல்ஏ தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதினார்: வீடியோ வெளியிட்ட தவெக!

சனி 9, மே 2026 10:22:33 AM (IST)



மன்னார்குடி தொகுதி அமமுக எம்எல்ஏ காமராஜின் போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமமுக எம்எல்ஏ தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதும் வீடியோவை தவெக வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

இந்தச் சூழலில் தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் டிடிவி தினகரன். அதேவேளையில், தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் கட்சியின் எம்எல்ஏவான காமராஜ், அதிமுகவை ஆதரிப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.

பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏ-வை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரை காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் அமமுக எம்எல்ஏ காமராஜ். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.

"நான் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார்” என்று அமமுக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்தார்.

அப்போது தினகரன், "உங்களிடம் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் மெஜாரிட்டி இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சி கொடுக்க வந்துள்ளீர்கள். நீங்கள் ராவணன், சீதையை கடத்தியது போல மாற்று கட்சியினரிடம் ஆதரவு கோரி வருகிறீர்கள். அது சட்டப்படி சரியாகவே இருந்தாலும் இதன் பின்னணியில் குதிரை பேரம் நடைபெறவில்லை என எப்படி சொல்ல முடியும்? அப்படி உணர்வதில் ஆளுநர் மற்றும் பலர் எண்ணுவதில் என்ன தவறு உள்ளது?

எங்கள் கட்சியின் எம்எல்ஏ-வின் பெயரில் ஆதரவு கடிதம் வந்துள்ளது. நல்ல வேளையாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்தக் கடிதத்தில் எங்கள் எம்எல்ஏ-வின் கையொப்பம் இருந்துள்ளது. அந்தக் கடிதத்தின் நகல் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல். அதைத்தான் தவெக தரப்பு ஆளுநரிடம் கொடுத்துள்ளது. இது போலித்தனம். தூய சக்தி என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அசல் கடிதம் கேட்கவே அதை கொண்டு வருகிறோம் என சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

ஆட்சி அமைக்கவே இப்படி மோசடி கடிதம் கொடுப்பவர்கள் நாளை ஆட்சி அமைத்த பிறகு என்ன செய்வார்கள்? இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளோம். இது குறித்து மீண்டும் ஆளுநருக்கு நாங்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

எங்களிடம் ஒரே ஒரு எம்எல்ஏ தான் உள்ளார். அவர் எளிதாக குதிரை பேரம் மூலம் பெற்று விடலாம் என இப்படி செய்துள்ளார்கள். அவர்களின் ஆணவப் போக்கை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்கள் எம்எல்ஏ-வின் எதிர்காலம் என்னவாகும்? அவர்களுக்கு இதுவரை யார் யார் ஆதரவு கொடுத்துள்ளார்களோ அதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய வேண்டும்” என தினகரன் தெரிவித்தார்.

இந்நிலையில், ‘டிடிவி தினகரன் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. தவெக யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை’ என குற்றச்சாட்டை மறுத்துள்ளது தவெக. அதோடு அமமுக எம்எல்ஏ தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதும் வீடியோவையும் தவெக பகிர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory