» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க ஆட்சி அமைப்பதில் தி.மு.க இடையூறு செய்யாது : மு.க.ஸ்டாலின் உறுதி

வியாழன் 7, மே 2026 10:16:19 AM (IST)

தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க உருவெடுத்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதில் தி.மு.க எவ்வித இடையூறையும் செய்யாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்தச் சந்திப்பின் போது, த.வெ.க-வின் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் சமர்ப்பித்தார். இருப்பினும், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்பதால், போதிய பலம் இல்லாததைக் குறிப்பிட்ட ஆளுநர், முழுமையான பெரும்பான்மைப் பட்டியலை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி வதந்தி?

ஒருபுறம் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்க, மறுபுறம் தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் பரவின. இரு கட்சிகளும் நேற்று நீண்ட நேரம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்துள்ள அரசியல் வட்டாரங்கள், தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லை எனக் கூறுகின்றன.
மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:    "தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க உருவெடுத்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதில் தி.மு.க எவ்வித இடையூறையும் செய்யாது. விஜய் தலைமையிலான புதிய அரசின் செயல்பாடுகளை அடுத்த ஆறு மாதங்களுக்கு நாங்கள் கவனிப்போம். தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைத் த.வெ.க அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது; இருப்பினும் தி.மு.க வழங்கியது போல் குறைந்தபட்சம் ரூ. 1,000-மாவது வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குவது சவாலான காரியம் என்றாலும், அதை அவர்கள் நிறைவேற்றினால் மகிழ்ச்சி. மாநிலத்தில் இப்போதைக்கு மீண்டும் ஒரு தேர்தல் வருவதையோ அல்லது அரசமைப்பு ரீதியான குழப்பங்கள் ஏற்படுவதையோ தி.மு.க விரும்பவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory