» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொல்கத்தாவுக்கு ஏற்றிச் சென்றபோது கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. திருட்டு: 6 பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 8:26:02 AM (IST)

கொல்கத்தாவுக்கு சென்ற கன்டெய்னரை உடைத்து அதில் இருந்த 111 ஏ.சி. எந்திரங்களை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மணலி விரைவு சாலை, எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் சபரி (35). இவர், சொந்தமாக டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 320 புதிய ஏ.சி. எந்திரங்களை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 4 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
பின்னர் 320 ஏ.சி. எந்திரங்கள் இருந்த அந்த கன்டெய்னர்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊழியர்கள் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 111 ஏ.சி. எந்திரங்கள் திருடுபோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி அறிந்த சபரி, எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கன்டெய்னர் யார்டில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (41) மற்றும் அவரது கூட்டாளிகளான ஜானகிராமன் (45), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான நெடுமாறன் (31), இளமாறன் (32), தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த சரவணன் (34), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதயநிதி (28) ஆகிய 6 பேரும் சேர்ந்து லாரி டிரைவரான குருமூர்த்தி உதவியுடன் கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. எந்திரங்களை திருடி, விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ் உள்பட 6 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ஏ.சி. எந்திரங்கள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் விற்பனை செய்த 15 ஏ.சி. எந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவர் குருமூர்த்தி உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள். கைதான ராஜேஷ், இதுபோல் ஏற்கனவே பல கன்டெய்னர்களை உடைத்து திருடியது தொடர்பாக 11 வழக்குகளும், நெடுமாறன் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

தாட்கோ மூலமாக விவேஷியஸ் அகடாமியில் பயிற்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:48:33 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)
