» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.61 லட்சம் மோசடி செய்தவர் கைது!
ஞாயிறு 13, அக்டோபர் 2024 10:20:22 AM (IST)
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக நெல்லையில் 25 பேரிடம் இருந்து ரூ.61 லட்சம் மோசடி செய்தவரை சென்னையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூர் ஆவரைகுளம், தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலரதீஸ் (23). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆவரைகுளம், சிவஞானபுரம் நடுத்தெருவை சேர்ந்த விஜிலகுமார் (46) மற்றும் 3 பேர் சேர்ந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலரதீஸ், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் புகார் கொடுத்தார். அவர் இந்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு நேரடி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பாலரதீஸ் தவிர மேலும் 24 பேரை ஏமாற்றி வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி விஜிலகுமார் பணமோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 25 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.61 லட்சத்து 49 ஆயிரம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் முக்கிய குற்றவாளியான விஜிலகுமார் நேற்று முன்தினம் நைஜீரியா நாட்டில் இருந்து வந்து சென்னை விமான நிலையத்தில் பதுங்கி இருப்பதாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்றனர். விமான நிலையத்தில் தலைமறைவாக இருந்த விஜிலகுமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.