» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரியில் காதல் ஜோடி தற்கொலை: காதலன் இறுதி சடங்கிற்கு முன் உயிரை மாய்த்த காதலி!

வியாழன் 11, ஆகஸ்ட் 2022 8:14:38 AM (IST)

நாங்குநேரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதையறிந்த காதலி தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவருடைய மனைவி சரஸ்வதி (47), மகன் உதயசங்கர் (20), மகள் சுதா (22). இதில் சுதா, நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சுதா நாங்குநேரியை சேர்ந்த தனது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையா (24) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பையாவின் அண்ணன் 2 பேர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதனால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பையா உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பிற்பகல் நாங்குநேரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றிருந்தனர். காதலன் சுப்பையா விஷம் குடித்து உயிரிழந்ததால் சுதா வாழ்க்கையில் வெறுப்படைந்தார். 

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். மாலையில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது சுதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அறிந்த அவருடைய உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

தூக்கில் தொங்கிய சுதாவை கீழே இறக்கி நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரின் தற்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட உருக்கமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory