» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

தூத்துக்குடி அருகே ரயிலில் 2 பயணிகளிடம் மோதிரம், கைப்பேசி மற்றும் ரொக்கப் பணத்தைப் பறித்துக் கொண்டு 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் தப்பியோடிய துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புன்னைவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமைய்யா மகன் பிச்சையா (55). இவர் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று இரவு மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த பயணிகள் ரயிலில் ஏறிப் பயணம் செய்துள்ளார். இரவு 10:25 மணியளவில் தூத்துக்குடி அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது, திடீரெனப் பெட்டிக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல், பிச்சையாவைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் இருந்த கைப்பேசி மற்றும் சட்டைப் பையிலிருந்த ரூ.100 ரொக்கப் பணத்தைக் கத்திமுனையில் அதிரடியாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.

அதிகாலையில் தொடர்ந்த 2-ஆவது கொள்ளை:

இதேபோல், தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம் மகன் மரிய அமல்தாஸ் (55). இவர் நேற்று இரவு கோவையிலிருந்து புறப்பட்ட 'கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலை 03:30 மணியளவில் மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கிய மரிய அமல்தாஸ், அங்கிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் ஏறிப் புறப்பட்டுள்ளார்.

அப்போது, அதே 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் மீண்டும் அந்தப் பெட்டிக்குள் புகுந்து, தனியாக இருந்த மரிய அமல்தாஸை வழிமறித்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர், அவர் கையில் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தை விநாடி நேரத்தில் பறித்துக் கொண்டு, ரயில் மெதுவாகச் சென்ற இடைவெளியைப் பயன்படுத்திப் பாதையிலேயே குதித்துத் தப்பியோடிவிட்டது.

ஓடும் ரயிலில் அடுத்தடுத்து சில மணி நேர இடைவெளியில் அரங்கேறிய இந்தத் துணிகர வழிப்பறிச் சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகள் தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மணியாச்சி மற்றும் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட ரயில் தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஓடும் ரயிலில் கைவரிசை காட்டிய அந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்மே 19, 2026 - 02:55:24 PM | Posted IP 162.1*****

என்கவுன்ட்டர் தான் சரியான தீர்வு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory