» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருணாநிதியின் கொள்கைகளைத் திமுகவினர் புதைத்து விட்டார்கள் - குஷ்பூ காட்டம்!

வியாழன் 16, ஏப்ரல் 2026 5:34:04 PM (IST)



சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திமுக இன்று எங்கே இருக்கிறது? அதனை எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள்?” என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ விமரிசித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அதனை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும், தங்களால் செய்ய முடியாத நற்செயல்களை மத்திய அரசு செய்யும்போது அதனைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வருவதால் திமுகவிற்கு மட்டும்தான் பாதிப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்தியா முழுவதும் வேறு எந்த மாநிலத்திலாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடக்கிறதா என்று வினவினார். மற்ற மாநிலங்களில் இல்லாத எதிர்ப்பு திமுகவிடம் மட்டும் இருப்பதிலிருந்து, அவர்கள் இதில் வெறும் அரசியலை மட்டுமே முன்னெடுக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

அடுத்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்ற தோல்வி பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டது என்றும், இந்தத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்குப் மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில் பிளாஸ்டிக் தடையை மீறி லைட்டர் கொண்டு தீப்பற்ற வைத்துப் போராட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டிய குஷ்பூ, அடிப்படை அறிவு கூட இல்லாமல் செயல்படும் நீங்கள் எப்படி மாநிலத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள் என்று முதலமைச்சரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். 

வெறும் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகச் சாடினார். தொகுதி மறுவரையறை குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துகள் குறித்துக் கேட்டதற்கு, அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடாததால் அவரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்குத் திமுகவே பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர் என்று விமரிசித்தார். கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பில் தங்களது வயதுக்கும் அந்தஸ்துக்கும் மரியாதை தராமல் அவர்கள் பேசி வருவதாகவும், ஆனால் தாங்கள் இன்றும் திமுகவினரை மரியாதையுடன்தான் விமர்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாத காரணத்தாலேயே, தாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் விரலை நீட்டிப் பேசுவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் குஷ்பூ தெரிவித்தார். இதுவரை தமிழக மக்களை மிரட்டி வந்தவர்கள், இப்போது பிரதமரையும் மத்திய அரசையும் மிரட்டப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், வேறு மாநிலத்திலிருந்து ஒரு முதலமைச்சரை யாராவது மிரட்டினால் திமுகவினர் சும்மா இருப்பார்களா எனக் கேட்டார். 

எங்களுக்குச் சுயமரியாதையையும் பிறரை மதிப்பதையும் சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இன்றைய திமுகவினர் அந்தச் சுயமரியாதையை மறந்துவிட்டுத் தகாத வார்த்தைகளில் பேசுவதைக் காணும்போது, கருணாநிதியின் திமுக எங்கே இருக்கிறது என்றும், அதனை எங்கே சேர்த்துப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory