» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்கம்பம் உடைந்து விழுந்ததில் வயர்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 24, ஏப்ரல் 2024 11:02:22 AM (IST)
தூத்துக்குடியில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் வயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் பெத்துக்குமார் (27), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காமராஜ் நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணிக்காக சென்றுள்ளார். மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பெத்துகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பணியின் போது மரணம் அடைந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய மின் உற்பத்தி மற்றும் விநியோக வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.