» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம் 2 ஆம் கட்ட துவக்க விழா : ஆட்சியர், மேயர் பங்கேற்பு

புதன் 8, பிப்ரவரி 2023 11:54:12 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக துவக்கி வைத்தார். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடக்கி வைத்தார். இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 1,217 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 572 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தேவதாசி முறையை ஒழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் பெயரில் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். 

அதேபோல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் பெயரில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000/- நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ; ஆவார். தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நமது மாநிலத்தில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு 51 சதவீதம் மாணவிகள்தான் உயர்கல்வி பயில கல்லூரிக்கு சென்றிருந்தனர். ஆனால் புதுமைப்பெண் திட்டம் வந்த பின்பு அதிகளவு மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்கின்றனர். மாணவிகள் கல்லூரி காலத்தில் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் 3 வருடத்திற்கும் மாதம்தோறும் ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் இப்பணத்தினை கல்வி செலவுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சேமிப்பு பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். சேமிக்கும் தொகை உங்களது மேல்படிப்பிற்கு பயன்படும். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் இருக்கிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு பள்ளிகளில் 6;ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்;த மாணவிகளின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் , பெண்கள் முன்னேற்றத்திற்கும், குழந்தைகளின் நலனுக்கும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி புல முதல்வர் சி.பீட்டர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory