» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:11:38 AM (IST)
திருச்செந்தூர் வெயிலு கந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 10-ம் திருநாளான நேற்று காலை 6.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இரவு அம்மன் அலங்கார சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து கோவிலை சேர்ந்தார். தேரோட்ட நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.