» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சத்துணவு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை: மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; மர்ம கும்பல் கைவரிசை!
சனி 2, ஜூலை 2022 3:07:31 PM (IST)
தூத்துக்குடி அருகே சத்துணவு ஊழியரின் வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம கும்பல், மற்றொரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியையும் தாக்கி நகையை பறித்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாரியம்மாள் (45). எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை திரும்பி வந்தபோது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அவரது வீட்டில் நகை-பணம் எதுவும் இல்லை என்பதால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பறித்துச் சென்றுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே கும்பல்தான் 3 இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.