» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு.
வெள்ளி 20, மே 2022 10:20:25 AM (IST)
சாத்தான்குளம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாழ்வாக உள்ள மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த பேய்க்குளம் அருகே உள்ள மேலமீரான்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி மூக்கம்மாள் (58). . இவர் ஆடு மாடு வளர்த்து வந்தார். ஆடு, மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். நேற்று மாலை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக அவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே ஆடு, மாட்டை அழைக்க சென்றவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றபோது அங்குள்ள நெல்லை மாவட்டம் சிந்தாமணி காட்டு பகுதியில் அவர் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஆழ்வார் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து இறந்த மூக்கம்மாள் சடலத்தை மீட்டு நாங்குனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பி அப்பகுதியில் தாழ்வாக சென்று வருவதாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அவை முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி மின் கம்பி அறுந்து விழுந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இதே போல் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்த மாடு ஒன்று பலியானது. தற்போது பெண் இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி மீரான்குளம், சிந்தாமணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பழுதான மின் வயர் மற்றும் மின் கம்பங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இறந்த பெண்ணுக்கு மின்வாரியத்தினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.