» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு A+ தரச்சான்று
புதன் 18, மே 2022 3:06:15 PM (IST)
தேசிய தரமதிப்பீட்டு ஆய்வுக்குழுவின் ஆய்வில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு A+ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் துணைவேந்தர் நாகலபள்ளி நாகராஜூ தலைமையில் பேராசிரியர் பிரவின் சக்சேனா மற்றும் முதல்வர் தரண்ஜீத் ஜீத் ஆகியோர் அடங்கிய மூவர் குழு ஆய்வு நடைபெற்றது. கல்லூரியில் உள்ள அனைத்து துறைகள் ஆராய்ச்சி மையங்கள், நூலகம், உடற்பயிற்சியகம், மின்னனு சார்ந்த பாடம்புகட்டும் கருவிகள், வேலைவாய்ப்பு மையம், புதிய தொழில் முனைவோர் மையம், வளாக வசதிகள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் நலம், உன்னத் பாரத் அபியான் ஆகியவற்றின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தார்கள்.
மேலும், கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரித்தல், மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தாவரவியல் பூங்கா, பசுமை இல்லம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்லூரி Bதரச்சான்றில் இருந்தது. தற்போது, B+, B++ மற்றும் A ஆகியவற்றை தாண்டி A+தரச்சான்றினை பெற்றுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் நிர்வாகத்தினர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிக்காட்டுகிறது. இந்த யூ தரச்சான்று இக்கல்லூரி மேலும் வளர்வதற்கு ஊக்கமாக இருக்கும் என கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.