» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2வது ரயில்வே கேட் பாதை திடீர் மூடல் : மக்கள் அவதி
புதன் 18, மே 2022 10:06:16 AM (IST)
தூத்துக்குடியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 2ஆம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனா்.
தூத்துக்குடி மாநகரில் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாக அமைந்துள்ள இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
மேலும், இரண்டாவது ரயில்வே பாதை அமைக்கும் வகையில் இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் இருந்த வரத விநாயகா் கோயில் அண்மையில் இடிக்கப்பட்டது. புதிதாக இரண்டாவது ரயில்வே பாதை விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைநீா் வடிகால் அமைக்கம் பணிக்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் சாலையின் நடுவே பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது.
இதனால், இரண்டாம் ரயில்வே கேட் வழியாக செல்லும் பாதையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து முழுமையாக மூடப்பட்டுள்ளன. முறையான தகவல் இல்லாததால் அந்த வழியாக செல்பவா்கள் மாற்றுப்பாதையில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் மழைநீா் வடிகால் அமைகக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ன அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.