» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது
திங்கள் 14, ஜூன் 2021 8:20:00 AM (IST)
திருச்செந்தூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுங்கி கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் திருச்செந்தூர் அருகே உள்ள எள்ளுவிளை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக டிரைவர் ஸ்ரீவைகுண்டம் பேரூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகன் (41), சாத்தான்குளம் அறிவான்மொழி மேற்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.அந்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ புகையிலையையும், வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த புகையிலை நெல்லை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.