» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜோ பைடன் நிர்வாகத்தால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தாமதம் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு
புதன் 19, மார்ச் 2025 5:33:03 PM (IST)
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் விண்வெளியில் 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள். அப்போதைய அதிபர் ஜோ பைடன் அனுமதி அளிக்காததால் அவர்கள் சுமார் 10 மாதங்கள் அங்கிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் திரும்பிய இருவரும் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் இறங்கினர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எஸ்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், "மற்றொரு விண்வெளி வீரரை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வந்ததற்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்கு அதிபர் ட்ரம்புக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விண்வெளி வீரர் சுனிதாவை முன்பே பூமிக்கு திரும்பி அழைத்து வரும் கோரிக்கையை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிராகரித்ததாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், "விண்வெளி வீரர்களை முன்பே பூமிக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விண்வெளி வீரர்கள் அங்கு 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள் சுமார் 10 மாதங்கள் அங்கிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் இதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஸ்பேஸ் எக்ஸ் சில மாதங்களுக்கு முன்பே விண்வெளி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்து வந்திருக்க முடியும். நாங்கள் அந்தக் கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் முன்வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கோரிக்கை நிகாரிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி மாதத்தில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், "கடந்த 2024 ஜுன் முதல் விண்வெளியில் இருந்து வரும் விண்வெளி வீரர்களை விரைவில் பூமிக்கு திரும்ப அழைத்து வருமாறு அதிபர் தன்னிடம் கேட்டுக்கொண்டார். ஜோ பைடன் நிர்வாகம் அவர்களை இவ்வளவு நாள் அங்கே விட்டு வைத்தது கொடுமையானது” என்று தெரிவித்திருந்தார்.
இதனை அப்போது அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், "பைடன் நிர்வாகத்தினால் விண்வெளியில் கைவிடப்பட்ட துணிச்சலான இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்படி, எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கேட்டுள்ளேன். அந்தத் திட்டம் விரைவில் தொடங்கும்.”என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!
சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)
