» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானுக்கு ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக உள்ளது : போரிஸ் ஜான்சன்
சனி 21, ஆகஸ்ட் 2021 11:58:04 AM (IST)
"ஆப்கான் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது" என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். தங்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலீபான்கள் அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அதேவேளையில், பிற முன்னணி உலக நாடுகள் இவ்விவகாரத்தில் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தலீபான்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கனடா அறிவித்துள்ளது. இந்நிலையில், தேவையேற்பட்டால் தலீபான்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயார் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஆப்கன் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் புக மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள்" என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.