தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒப்பந்தத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கயத்தாறு பகுதியிலிருந்து கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் பொருட்களை ஓட்டப்பிடாரத்திற்கு ஏற்றிச் செல்ல ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரிகள் பயன்படுத்தப்படுவதாகத் தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் 'ஈ-வாகன்' சேவை அமைப்பினர் இணைந்து, தூத்துக்குடி மடத்தூர் அருகே வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 லாரிகளையும் தடுத்து நிறுத்திச் சிறைபிடித்தனர்.

தமிழகத்திற்குள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு பகுதிக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி குறித்து ஓட்டுநர்களிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரரின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஏற்றிச் செல்வதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கையில்: "வெளிமாநில லாரிகள் தமிழகத்தில் சரக்குகளை இறக்கிய பிறகு, விதிகளை மீறி மீண்டும் இங்கிருந்தே சரக்குகளை ஏற்றிச் செல்வதால் உள்ளூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் இதுகுறித்து முறையான சோதனைகளை நடத்துவதில்லை. எனவே, அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு விதிமீறலில் ஈடுபடும் வெளிமாநில லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.