தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த கேரளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியைப் பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (57). கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன் தோப்பு பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் சக தொழிலாளர்களுடன் கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் 35 வயதுடைய திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண் தனியாக இருந்ததை நோட்டமிட்ட சுனில், வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போடவே, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சுனிலைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவரை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனிலைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.