பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். நாட்டின் இளைஞர்களுடன் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டில் திருமணம் நடத்துவது மற்றும் தேவையற்ற தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்தபடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்பாக சுமார் 3 நிமிடங்கள் பேசும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். "7.8% வளர்ச்சி.. வலுவான புள்ளிவிவரங்கள்.. அதைவிட வலுவான நம்பிக்கை" என்ற தலைப்பில் அவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் 7 சதவீத மதிப்பீட்டை விட அதிகமாகும். உற்பத்தி, சர்வீஸ் மற்றும் முதலீட்டு துறைகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் போர்கள், நெருக்கடி மற்றும் விநியோக சங்கிலி பாதிப்புகள் இருக்கும் போதிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
அவர் மேலும், "உலகம் போரில் மூழ்கியுள்ளது. நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. விநியோக சங்கிலி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலைத்தன்மை இல்லை. இத்தகைய சூழலிலும் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில் சிலர் தொடர்ந்து பொய்களை பரப்புவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்" என்று மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த வீடியோவில் பிரதமர் மோடி மீண்டும் ஆத்மநிர்பர் பாரத் கொள்கையை வலியுறுத்தினார். இந்தியாவிலேயே திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்கான அழைப்பையும் முன்வைத்தார். தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவசியமில்லாமல் தங்கத்தை வாங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அவர் மேலும், "நாம் தற்சார்புடையவர்களாக மாற வேண்டும். இந்தியாவிலேயே திருமணங்களை நடத்த வேண்டும். இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று திருமணத்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும். தேவை இல்லையென்றால் தங்கத்தைக்கூட வாங்கக்கூடாது. நாம் ஸ்வதேசிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்போது, தற்சார்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்தியா சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, வளர்ந்த இந்தியாவை இளம் தலைமுறையிடம் வழங்குவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றும் மோடி தெரிவித்தார்.
முதல் காலாண்டின் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை பிரதமர் மிக பெரிய சாதனை எனப் பாராட்டியிருந்தார். அழிவு வரும் என்று கணித்தவர்கள் தோல்வியடைந்தனர் என்றும் இந்தியா மீண்டும் வளர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

