தென் மாவட்டத்தில் உள்ள மக்களின் பாரம்பரிய நிகழ்வான தாய்மாமன் சீர் என்பது இன்றளவும் இருந்து வருகிறது. தனது சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெறும் காதணி விழாக்களின் போது தாய்மாமன் சீர் வழங்குவது என்பது அன்பு, கௌரவத்தின் வெளிப்பாடாக நினைத்து சீர் வழங்கி வரும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆகிய பகுதிகளில் தாய் மாமன் சீராக ஊரே பிரமிக்கும் வகையில் செய்வர். அதன்படி கடந்த 28ஆம் தேதி மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறுமியின் காதணி விழாவில் பிரமாண்டமான தாய் மாமன் , மொய் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கியது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போதைய காதணி விழாவிற்கு சிறுமியின் தாய் மாமன் மற்றும் சிறுமியின் தாத்தாவின் சார்பில் மதுரையே பிரமிக்கும் வகையில் 500 ரூபாய் கட்டுகளை வைத்து 60 லட்சம் ரூபாயை பெட்டி பெட்டியாக தலையில் வைத்து சுமந்து சென்று மொய் செய்துள்ளனர்.

மேலும் 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளி தட்டுகளில் சீர் வரிசை, சொகுசு கார், வெள்ளி பொருட்கள், லாரியில் 500 வகை சீர் தட்டுக்கள், 50 கரும்பு கட்டுகள், 500 மூட்டை அரிசி, கண்ணாடி என தாய்மாமன் சீராக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்த வீடியோவிற்கு கீழ் "தாய் மாமன் சீர் னா" இப்படிதான் இருக்கும்போல என ஒவ்வொருவரும் வியந்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். காதணி விழாவுக்கே இப்படி என்றால், பூப்பெய்தல் விழா, திருமண விழா உள்ளிட்டவைகளுக்கு எந்த மாதிரியான சீர்வரிசைகளை செய்வார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.