தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (63). இவர் சாத்தான்குளம் முதன்மைச் சந்தைப் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாத்தான்குளத்தில் பழக்கடை நடத்தி வரும் கொம்பன்குளம் மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், பாஸ்கர் தான் வங்கியில் அடமானம் வைத்த நகை ஏலத்திற்கு வருவதாகவும், அதை மீட்பதற்கு ரூ.1 லட்சம் கடனாகத் தருமாறும் ரவியிடம் கேட்டுள்ளார். அதனை நம்பி ரவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர் பாஸ்கர் ரூ.70 ஆயிரத்தை மட்டும் ரவியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தைக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரவி நேரில் சென்று பாஸ்கரின் வீட்டிற்குச் சென்று பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், நகை வியாபாரி ரவியை அவதூறாகப் பேசி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ரவி, சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கரை கைது செய்தனர்.

