» சினிமா » செய்திகள்
மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் : அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி!
திங்கள் 20, பிப்ரவரி 2023 11:12:18 AM (IST)
எனது நெடுங்கால நண்பர் மயில்சாமியின் ஆசையை நிறுவேற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி(57) திடீா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இன்று மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சிவனின் அதி தீவிர பக்தர் மயில்சாமி. நாங்கள் இருவரும் சந்திக்கும்போது எம்ஜிஆர், சிவன் பற்றி மட்டுமே பேசுவார் மயில்சாமி. கடந்தமுறை மயில்சாமி என்னை போனில் தொடர்பு கொண்டபோது என்னால் பேச இயலவில்லை.
தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவபெருமான் அழைத்துச் சென்றுவிட்டார். ஒவ்வொருமுறை கார்த்திகை தீபத்தின்போதும் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு போன் செய்வார். மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயல் கிடையாது. அது சிவனின் கணக்கு. கேளம்பாக்கம் சிவன் கோயிலில் நான் பால் அபிஷேகம் செய்யும் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன். விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பு என்றார்.