» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!

வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் 359 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டி அபார வெற்றி பெற்றது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது இந்தியா. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் விளாசினர். கே.எல்.ராகுல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. டிகாக் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் பவுமா உடன் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மார்க்ரம். பவுமார் 46 ரன்களில் வெளியேறினார். தொடந்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே உடன் 70 ரன்கள் கூட்டணி அமைத்தார் மார்க்ரம். 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார்.

பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரீட்ஸ்கே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் இணைந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரேவிஸ் 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ப்ரீட்ஸ்கே 64 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி சோர்ஸி 17 ரன்களில் ரிட்டையர்ட் ஹெர்ட் முறையில் வெளியேறினார். யான்சன் 2 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை கார்பின் போஷ் (29) மற்றும் கேஷவ் மகாராஜ் (10) எடுத்து கொடுத்தனர். 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory