» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!

திங்கள் 8, ஜூலை 2024 5:25:07 PM (IST)

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வுக் குழுவில் சனத் ஜெயசூர்யா ஏற்கனவே கடந்த காலத்தில் இருந்துள்ளார். 

அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டார். சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,973 ரன்கள் குவித்துள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13,430 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும். கடந்த 1996 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட் அண்மையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory