» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அபிஷேக் சர்மா அதிரடி சதம்: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

ஞாயிறு 7, ஜூலை 2024 8:51:03 PM (IST)



ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தனர். அறிமுகப் போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா இன்றையப் போட்டியில் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட, ருதுராஜ் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், ருதுராஜுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். அரைசதம் எடுக்கும் வரை நிதானம் காட்டிய ருதுராஜ், அதன்பின் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மத்வீர் 43 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, லூக் ஜோங்வி அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory