» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

வெள்ளி 28, ஜூன் 2024 10:19:04 AM (IST)



டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்ட, கோலி 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த் 4 ரன்களுக்கே நடையைக் கட்ட, 4-ஆவது பேட்டராக சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார். இந்தியா 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 65 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் ரோஹித் - சூர்யகுமார் கூட்டணி 73 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதில், ரோஹித் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 57, சூர்யகுமார் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களுக்கு வீழ்ந்தனர்.

பின்னர் பேட் செய்தோரில் ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களுக்கு வெளியேற, ஷிவம் துபே கோல்டன் டக் ஆனார். அக்ஸர் படேல் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு வீழ்ந்தார்.ஓவர்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 17, அர்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பௌலர்களில் கிறிஸ் ஜோர்டான் 3, ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன், ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 172 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜாஸ் பட்லர் 4 பவுண்டரிகளுடன் 23, ஃபில் சால்ட் 5, ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மொயீன் அலி 8, சாம் கரன் 2 ரன்களுக்கு வீழ்ந்தனர். ஹேரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்ப, கிறிஸ் ஜோர்டன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

லியம் லிவிங்ஸ்டன் 11, ஆதில் ரஷீத் 2, ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களுக்கு ரன்களுக்கு சாய்க்கப்பட, இங்கிலாந்து ஆட்டம் நிறைவடைந்தது. இந்திய தரப்பில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினர்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறியது இந்தியா. இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு போட்டியில் இறுதிக்கு வந்த இந்தியா, அதில் இலங்கையிடம் தோற்றது. கடந்த 2022 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா, தற்போது அதே அணியை, அதே கட்டத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory