» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் கல்லூரி மாணவர் கொலைக்கான காரணம் என்ன? காவல்துறை அறிக்கை!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:41:50 AM (IST)

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் (19) அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 10-ஆம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கோவை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடலூரைச் சேர்ந்த ஆரமுதன் (20), சிவகங்கையைச் சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூரைச் சேர்ந்த சிவா ரோகித் (20), பெரம்பலூரைச் சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் கொலை விவகாரத்தில் போதைப்பொருள் புகாரே காரணம் எனக் பரவி வந்த தகவலைக் காவல் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது குறித்துப் போலீசார் தெரிவித்ததாவது: கடந்த 9-ஆம் தேதி அமுதன் உட்பட 9 மாணவர்கள் முகமூடி அணிந்து சென்று, விடுதியில் 4-ஆம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து செல்போன்களைப் பறித்துள்ளனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அமுதனை அடையாளம் கண்ட மூத்த மாணவர்கள், அவரைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். (செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீதும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது).
போதைப்பொருள் தொடர்பாகக் காவல் நிலையத்தில் அமுதன் புகார் அளித்ததால் தான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாகப் பரவும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. 

அமுதன் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. இவ்வழக்கில் தற்போது சந்தோஷ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்தில் மொத்தம் 20 மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 6 பேர் கைதாகியுள்ளனர். அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 7 மாணவர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory