» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் இந்த 'டேக் டைவர்ஷன் மாடல்' (Take Diversion Model) தவெக அரசு திட்டமிட்டுக் குறிவைத்து வேட்டையாடி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவதூறு வழக்குகளில் கூடத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளை ஏன் சேர்க்கிறீர்கள் என நீதிமன்றத்திடம் சமீபத்தில் இந்த அரசு குட்டு வாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தனது வழக்கறிஞரையோ அல்லது ஆதரவாளர்களையோ நேரில் சந்தித்துப் பேச போலீசார் அனுமதிக்கவில்லை. அவருக்குத் தேவையான அவசர மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியின் அடிப்படைச் சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் இந்த ஆட்சியில் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா எனக் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், பொது மைதானத்தில் மாத்திரை அரைத்த ஆளுங்கட்சி அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினருக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரிலும் நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்து எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது ஏன் என்று சாடியுள்ளார்.
ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல் துறையினரின் பணி அல்ல என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். போலீசார் அனைவரும் சட்டப்படியும் தங்களது மனசாட்சிப்படியும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளை (There will be consequences) எதிர்கால சட்டம் மற்றும் ஆட்சி மாற்றத்தின் போது சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)








