» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!

ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

NirmalaSitaramadurai.jpg

இந்தியாவில் யு.பி.ஐ தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2,000 கோடிக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள் கையாளப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: உலகளாவிய போர்ப் பதற்றங்கள், எண்ணெய், எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாகத் திகழ்கிறது. நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெருநகரங்களைத் தாண்டி 2ஆம், 3ஆம் கட்ட நகரங்களுக்கும் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

நாட்டில் பின்தங்கிய 114 மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை ‘லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இத்திட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன.

உள்ளூர் தயாரிப்புகளின் உலகளாவிய சந்தையை மேம்படுத்தச் சிட்பி (SIDBI) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவைத் தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற ‘விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்துச் சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர்.

பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை, எப்போதும் அழியாத மீளெழுச்சியின் அடையாளமாக உள்ளது. பல்வேறு சாதனைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory