» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை: 29 நாட்களில் அதிரடி தீர்ப்பு!

சனி 11, ஏப்ரல் 2026 8:52:15 AM (IST)

தனது வளர்ப்பு மகளையே பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட 29 நாட்களிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது தொழிலாளி ஒருவர், தனது 11 வயது வளர்ப்பு மகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்துத் தொழிலாளியின் மனைவி அளித்த புகாரின் பேரில், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா கடந்த மாதம் 12-ஆம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தார். மேலும், குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் போலீசார் மிகத் துரிதமாகச் செயல்பட்டு, 5 நாட்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் 6-வது நாளிலிருந்து விசாரணை தொடங்கப்பட்டு, வெறும் 5 வேலை நாட்களுக்குள் அனைத்து விசாரணைகளும் முழுமையாக முடிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட நபருக்குச் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

குறுகிய காலத்தில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் எஸ்பி சண்முகம், நாங்குநேரி டிஎஸ்பி தர்ஷிகா நடராஜன், இன்ஸ்பெக்டர் சுதா, ஏட்டு வளர்மதி மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் நேரில் பாராட்டினார்.

இது குறித்து எஸ்பி பிரசன்னகுமார் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்" என எச்சரித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory