» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள்: இபிஎஸ் அறிவுறுத்தல்
புதன் 26, நவம்பர் 2025 5:17:20 PM (IST)
எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த நவ.4-ம் தேதி முதல் இதுவரை 6.16 கோடி பேருக்கு (96 சதவீதம்) 3.19 கோடி பேரின் படிவங்கள் (50 சதவீதம்) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த படிவங்களை வழங்க டிச.4-ம் தேதி வரை, அதாவது இன்னும் 9 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணி, அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏக்கள் (வாக்குச்சாவடி முகவர்கள்) ஆகியோரின் பணிகள் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்காக அலுவலகத்தில் ராட்சத டிஜிட்டல் திரைகள், ஒலிப்பெருக்கி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் வேகமாகவும், துரிதமாகவும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள வேண்டும். தங்கள் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எஸ்ஐஆர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும். யாருக்காவது படிவம் கொடுக்கப்படாமல் இருந்தால் உடனடியாக நமது பிஎல்ஏக்கள் மூலமாக பிஎல்ஓக்களை தொடர்புகொண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட படிவத்தை முறையாக திரும்பப் பெற்று பிஎல்ஓவிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேகமாக துரிதமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். திமுகவினர் தில்லுமுல்லு செய்வதை தடுத்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துங்கள். அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்று கூட விடுபட்டு விடக்கூடாது. அதனால், எஸ்ஐஆர் பணியை அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
வெளியூர் செல்லக்கூடாது: இதில் பிஎல்ஏக்களின் பங்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, இப்பணியில் ஆளும் திமுகவின் தலையீடு, அதிகாரிகள் மெத்தனம் தெரியவந்தால், உடனடியாக மாவட்ட தலைமைக்கும், வழக்கறிஞர்கள் அணிக்கும் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து, அதன் விவரங்களை தலைமைக்கும் அனுப்ப வேண்டும். இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
அதனால் டிச.4-ம் தேதி வரை மாவட்டச் செயலாளர்கள் யாரும் வெளியூர்களுக்கு சென்றுவிடக்கூடாது. சொந்த மாவட்டங்களுக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சில மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணி கண்ணிப்பில் தொய்வு இருப்பதாக அறிகிறேன். இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டால், தொடர்புடைய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுங்கள். நமது ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைப் பட்டியலை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

மாமதுரையின் தேவையை மக்கள் முடிவு செய்வார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:42:06 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)











avvvNov 26, 2025 - 05:37:28 PM | Posted IP 104.2*****