» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 பவுன் நகை அபேஸ்: வாலிபர், நிதி நிறுவன ஊழியர் கைது!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 8:45:27 AM (IST)

ஆலங்குளத்தில் புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 பவுன் நகையை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த நிதி நிறுவன ஊழியரும் சிக்கினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (32). இவர் ஆலங்குளம் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதி மக்களிடம் தன்னை சாமியார் என்றும், பரிகார பூஜைகள் செய்வதாகவும் கூறினார்.

இந்த நிலையில் முத்துசெல்வம் அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான செல்லத்தாயிடம், ‘‘உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது. அதனை எடுப்பதற்கு நகைகளை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதனை உண்மை என்று நம்பிய செல்லத்தாய் தனது வீட்டில் இருந்த 18 பவுன் நகைகளை முத்துசெல்வத்திடம் கொடுத்தார். அந்த நகைகளை சிறிய மண்பானைக்குள் வைத்து துணியால் கட்டி வைத்து பூஜை செய்த முத்துசெல்வம், பின்னர் அதனை செல்லத்தாயின் வீட்டுவாசலில் கட்டி தொங்கவிட்டார். மேலும் அதனை 6 மாதங்களுக்கு பிறகு திறந்து பார்த்தால்தான் புதையல் கிடைக்கும் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துசெல்வத்தின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த செல்லத்தாய், வீட்டுவாசலில் தொங்கவிடப்பட்டு இருந்த மண்பானையை திறந்து பார்த்தார். அப்போது அதில் நகைகள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து செல்லத்தாய் தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் முத்துசெல்வத்திடம், நகைகளை திருப்பி தரவில்லையெனில் போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக கூறினர்.

இதையடுத்து முத்துசெல்வம் நகைகளுக்கு பதிலாக முதல்கட்டமாக ரூ.1½ லட்சத்தை செல்லத்தாயிடம் திருப்பி கொடுத்தார். மீதி நகைகளுக்கான பணத்தையும் சில நாட்களில் தருவதாக கூறினார். ஆனால் நீண்ட நாட்களாகியும் முத்துசெல்வம் பணத்தையோ, நகைகளையோ தரவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த செல்லத்தாய் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசெல்வத்தை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், முத்துசெல்வம் பரிகாரபூஜை செய்வதாக வாங்கிய நகைகளை நைசாக அபேஸ் செய்து, தனது நண்பரும், தனியார் நிதி நிறுவன ஊழியருமான சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரிச்செல்வத்திடம் விற்றது தெரியவந்தது.

உடனே முத்துசெல்வம், மாரிசெல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.80 ஆயிரத்தை மீட்டனர். கைதான இருவரையும் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory