» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்குவாரி விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 12, செப்டம்பர் 2022 2:57:53 PM (IST)
தென்காசி கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் "தென்காசி அருகே உள்ள பாட்டாக்குறிச்சி தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆயிரப்பேரி அருகே உள்ள பாட்டபத்து என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே அவர் உயிரிழந்ததற்கு காரணம் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நான்கு உயிர்களை பலி கொடுத்த பின்னரும் குவாரிகள் விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் குவாரிகளின் விதிமீறல் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரைப்படி சுமார் 300 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் இவ்வாறு குவாரிகளை ஆய்வு செய்ய குழு எதுவும் அமைக்கப்படவில்லை. பலமுறை நான் இதுகுறித்து வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
தற்போது நாம் பயந்தபடியே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவல நிலை மீண்டும் தொடராமல் இருக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் உடனடியாக ஆய்வு செய்ய தனி குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விதிகளை மீறிய குவாரி உரிமையாளரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் பலியான பரமசிவம் என்பவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தென்காசி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொள்ளை போய் கொண்டிருப்பதை தடுக்காத அதிகாரிகள் குவாரிகளை ஆய்வு செய்யவும் தயாராக இல்லைஎன்பது இந்த விபத்தின் மூலம் தெளிவாகிறது. பாட்டாக்குறிச்சி குவாரியில் நடந்த விதிமீறல் மற்றும் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடிக்காதது குறித்து குழு அனைத்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் தெரிவித்துள்ளார்.