» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி தொடங்கப்பட்டது: ஓபிஎஸ் புகாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்

சனி 19, ஜூன் 2021 5:14:44 PM (IST)

நீட் (NEET) தேர்வு தொடர்பான சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (18-6-2021) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தெளிவான பதில் அளித்தார். 

இது குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு வருமாறு: எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் நீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில் நீட் தேர்வு பயிற்சிகள் தமிழகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் குழப்பம் அடைவதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தொடங்கப்பட்டது. 

இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்காக கவலைப்பட்டு பேசுகிறாரா? அல்லது அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காக பேசுகிறாரா? என்ற குழப்ப நிலை உள்ளது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் பற்றி குழப்பம் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவித்ததற்கேற்ப, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சரியான அளவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இனிமேல் நீட் தேர்வு நடைபெறாமல் இருப்பது குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவிற்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அக்குழு அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நான்கு தொடர் கூட்டங்களை மிக வேகமாக நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது பற்றியும், அதை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வு தொடங்கப்பட்டதுபோல் கருத்து தெரிவித்துள்ளார்.

 2010 டிசம்பர் 27 அன்று ஒன்றிய அரசு குறிப்பாக தேசிய தகுதி மற்றும் இந்திய மருத்துவ குழுமம், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. 2011 ஜனவரி 3ஆம் நாள் தேசிய அளவில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை பரிசீலிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது. 2011ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்றுதான், தமிழக முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் நீட்த் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கில் தடையாணையும் பெற்றுத்தந்தார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

2017இல் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்திற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் - இன்றைய தமிழக முதலமைச்சர் முழு ஆதரவு அளித்து அத்தீர்மானங்கள் நிறைவேற காரணமாக இருந்தார். அந்த மசோதாக்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு, அதாவது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக அரசின் சார்பில் எந்தவிதமான அழுத்தம் மற்றும் தொடர் வலியுறுத்தல்கள் இல்லாத காரணத்தால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார்.

சட்ட முன் வடிவை உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததால் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்தது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. தமிழக மாணவர்களுக்காகப் பரிந்து எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இப்போது நீட் தேர்விற்கு எதிரான தீவிர நடவடிக்கையில் ஈடுபடும்போது, நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு இல்லாமல் மாணவர்களின் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று தெரிவித்துள்ளார். நிச்சயமாக அவருடைய கருத்திற்கேற்ப திமுக நீட் தேர்வை விலக்குவதற்கு தேவையான முழு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வை மறுபடியும் நடைமுறைக்கு கொண்டுவந்தது யார்? மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? மாணவர்களின் தொடர் குழப்பதற்கு காரணமானவர்கள் யார்? என்று தமிழக மக்களுக்கு தெரியும். இந்த விவரங்களெல்லாம் அவருக்கும் தெரியும். தெரிந்திருந்தும் இதுபோன்ற குழப்ப அறிக்கையை ஏன் வெளியிட்டார் என்று தெரியவில்லை.

மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராவதென்பது கடந்த 4 ஆண்டுகளாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் மாணவர்களும் நீட் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு எண்ணம். ஆனால் கடந்த கால அதிமுக அரசு, குடியரசுத் தலைவரிடம் தெளிவாக விளக்கி கூறி நீட் தேர்விற்கு விலக்குபெறாமல் விட்டுவிட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்விற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடையாணைப் பெற்று நீட் தேர்வை ரத்து செய்தது திமுக ஆட்சியில்தான்.

அதேபோல் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அதற்கான மேல்நடவடிக்கைத் தொடரும். மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன்லைன் வகுப்புகளில் இருக்கிற கஷ்டங்கள் தெரியாதா? என்று கேட்கிறார். அந்த ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட்டது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான். அதுவும் இப்போது தொடங்கப்பட்டதுபோல் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

கடந்த கால அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தல் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது போல் இல்லாமல், நீட் தேர்விற்கு எதிரான வலுவான காரணங்களை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு போல் செயல்பட்டு அப்போது நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுபோல் இப்போதும் இரத்து செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இவ்வாறு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory