» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

தூத்துக்குடியில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் 1 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பார்வதி (75). கடந்த ஜூன் 19-ஆம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி பார்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு பெண் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

அவர் பார்வதியிடம், "நான் அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுத் தருவதற்காக விபரங்களை எழுதி வாங்க வந்துள்ளேன்" என்று கூறிப் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு வாங்கித் குடித்துவிட்டு, தொடர்ந்து மூதாட்டியிடம் நயமாகப் பேசியுள்ளார்.

அப்போது அந்த மர்மப் பெண், "தற்போது அரசு அதிகாரி ஒருவர் சரிபார்ப்பதற்காக வெளியே வருகிறார்; நீங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் வசதியானவர் என்று நினைத்து அரசுப் பணம் வழங்க மறுத்துவிடுவார். எனவே, செயினைக் கழற்றிப் பத்திரமாக வையுங்கள்" என்று கூறியுள்ளார். 

இதனை நம்பிய மூதாட்டி பார்வதி, தன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றியுள்ளார். உடனே அந்தப் பெண், "என்னிடம் தாருங்கள், நான் பத்திரமாகத் தருகிறேன்" எனக் கூறி சங்கிலியைத் தன் கையில் வாங்கிக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து, "அதிகாரி வெளியே பேருந்து நிறுத்தம் அருகில் நிற்கிறார், அங்குச் செல்லலாம்" என மூதாட்டியை நயமாக அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வரை வந்துள்ளார். அங்கு வந்தவுடன் அந்தப் பெண் திடீரென வந்த ஒரு பேருந்தில் ஏறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன் சங்கிலியைக் கேட்க, "நான் நாளைக்கு உங்களது வீட்டிற்கே நேரில் வந்து தந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டுப் பேருந்தில் தப்பிச் சென்றுவிட்டார். 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி பார்வதி, வீட்டிற்கு வந்த தன் மகன் பூபதியிடம் இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பூபதி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிறுத்தப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையைப் பறித்துச் சென்ற மர்மப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory