» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அருஞ்சுணை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா: மார்ச் 23-ல் கொடியேற்றம்!

வியாழன் 19, மார்ச் 2026 10:53:35 AM (IST)



மேலப் புதுக்குடி அருஞ்சுணை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் மேலப் புதுக்குடி கிராம எட்டுப் பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

திருவிழாவின் முதல் நாளான மார்ச் 23-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். காலை 4 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து 6 மணிக்குத் திருக்கொடியேற்றமும் நடைபெறும். பின்னர், அருஞ்சுணை காத்த அய்யனாருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். மதியம் 12 மணிக்குப் புஷ்ப அலங்காரத்துடன் உச்சிக்கால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளித் திருக்கோவில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மார்ச் 24-ஆம் தேதி முதல் தினசரி பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆறாம் நாள் திருவிழாவான மார்ச் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8:30 மணிக்கு அய்யனாருக்குச் சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைபெறும். அன்று மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான 10-ஆம் நாள் விழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், சாஸ்தா மூல மந்திர ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெறும். காலை 8:30 மணிக்குச் சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு மேல் பங்குனி உத்திரக் கும்பாபிஷேகமும் நடைபெறும். காலை 11 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனைக்குத் தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடும் நிகழ்வு நடைபெறும்.

அன்று இரவு 12 மணிக்குக் கலைநயமிக்கப் புஷ்ப அலங்காரத்தில் அய்யனாருக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு 1 மணிக்கு உற்சவ அய்யனார் கற்பகப் பொற்சப்பரத்தில் எழுந்தருளி, மேலப் புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கலை நிகழ்ச்சிகள்

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினசரி இரவு நேரங்களில் பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் பக்திச் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகக் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory