» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்களுக்கு எதிரான கொடூரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: சீமான் ஆவேசம்
வியாழன் 12, மார்ச் 2026 4:57:49 PM (IST)
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண் குழந்தைகளைச் சிதைக்கும் கொடூரர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விளாத்திகுளம் மாணவி படுகொலை செய்யப்பட்ட சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே 16 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு பேராபத்தான சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் பெருகி வரும் படுகொலைகள், கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்குக் கட்டுக்கடங்காத கஞ்சா மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமே அடிப்படை காரணமாகும். மதுவை அரசே விற்றுக்கொண்டு, போதைப்பொருட்களை ஒழிக்காமல் இத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
அரசின் அலட்சியம்:
கிருஷ்ணகிரி 2 வயது குழந்தை முதல் ஊத்தங்கரை 60 வயது மூதாட்டி வரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மதுராந்தகம் மற்றும் சென்னை சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. தேர்தல் கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டாதது ஏன்?
கேள்விக்குறியாகும் போக்சோ சட்டங்கள்:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதியப்பட்ட போக்சோ (POCSO) வழக்குகளில், தண்டனை பெற்றுத் தரப்பட்டவை மிகச் சொற்பமே. 1,000, 2,000 என உரிமைத்தொகை வழங்குவதை விட, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே அவர்களுக்கு வழங்கும் உண்மையான உரிமையாகும்.
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். மதுராந்தகம் மற்றும் சென்னை அடையாறு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
குற்றங்களுக்கு மூலகாரணமாக இருக்கும் மது மற்றும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சியில், இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படப் போகிறார்களோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது" என சீமான் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உயிரிழந்த சிறுமியின் படத்தை வெளியிடக் கூடாது : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
வியாழன் 12, மார்ச் 2026 8:20:55 PM (IST)

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.அனுசுயா தீவிர பிரசாரம் : தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!
வியாழன் 12, மார்ச் 2026 8:13:57 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!
வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)

போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:00:59 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)









