» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்: தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

திங்கள் 2, பிப்ரவரி 2026 7:37:42 AM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூச திருவிழாவில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தினமும் இரவு 7 மணியளவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடந்தது.

கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

காலை 10 மணியளவில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், வார்டு கவுன்சிலர் ஜெயக்கொடி மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் தெற்கு ரத வீதியில் இருந்து புறப்பட்ட போலீஸ் நிலைய சாலை, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார், நடுதெரு வழியாக நிலையை சென்றடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணியளவில் கோவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தலைமையில் திரளான பக்தர்கள் கையில் விளக்கு ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் ெசன்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திருவிழா பாதுகாப்பு பணியில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், ராஜ்மோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு 



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத்தேரோட்டத்தின் போது, தேருக்கு தடி(தடுப்பு) போட்டு வந்த கழுகுமலையை சேர்ந்த சப்பாணி முத்து (70) என்பவர் தவறி தேர் சக்கரத்தில் விழுந்து உயிரிழந்தார். கழுகுமலை போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சப்பாணி முத்து அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் காவலாளியாக  பணியாற்றி வந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory