» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உதவி: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

புதன் 3, டிசம்பர் 2025 10:38:50 AM (IST)

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் (TWEES) மகளிருக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் நோக்கத்துடனும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும்  நோக்கத்துடனும் "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தில் மகளிருக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.  

இத்திட்டத்தின் மூலம் 25% மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ2,00,000 வரை) ரூ. 10 இலட்சம் வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும்.  இத்திட்டத்தில் நேரடி விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் தவிர்த்து வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.  

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 55 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், மாவட்ட தொழில் மையம் மூலம் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்று தற்போது தொழிலை விரிவாக்கம் செய்பவர்களுக்கும், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் விதை மூலதன கடன் (PMFME Seed Capital) பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் கடனுதவி வழங்கப்படும்.  மேலும் இத்திட்டத்தில் சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5% இருக்க வேண்டும்.  கடனுதவி பெறும் விண்ணப்பதாரருக்கு 3 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்படும். 

ஆதிதிராவிடர் / பழங்குடியினர், திருநங்கைகள் / கைம்பெண்கள் /வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் /மாற்றுத்திறனாளிகள் கடன்பெற முன்னுரிமை  வழங்கப்படும். 

இத்திட்டத்தில் மட்கும் பொருட்கள் தயாரித்தல், விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவிடு வைக்கோல்) இருந்து தட்டுகள், கோப்பைகள் போன்ற பொருட்கள் தயாரித்தல், தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் தோட்டக்கலைப் பொருட்கள், காகித கழிவுகளில் இருந்து பென்சில் தயாரித்தல், வாழை நார் பொருட்கள் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள், வாழ்த்து அட்டைகள், கண்ணாடி ஓவியம், போட்டோ பிரேம், கண்ணாடி பொருட்கள், பட்டு நூல் அணிகலன்கள், குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் உணவு தயாரித்து தேவைப்படுவோருக்கு விற்பனை செய்தல், யோகா/உடற்பயிற்சி நிலையம், வளர்ப்புப் பிராணிகள் பராமரிப்பு நிலையம், சலவை நிலையம், மணப்பெண் அலங்காரம்/மெகந்தி மற்றும் டாட்டு நிலையம், ஊட்டச்சத்து ஆலோசனை நிலையம், இன்டீரியர் வடிவமைப்பு, சத்துமாவு உருண்டைகள், உலர் பழங்கள், பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் லட்டு வகைகள், தானியங்கள் சார்ந்த பேக்கரி பொருட்கள், ஐஸ்கீரீம்கள், லெமன் கிராஸ் எண்ணெய், வெட்டிவேர்/தைல எண்ணெய், ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் பல தொழில்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.  
   
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் (GST எண்ணுடன்) பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 2, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ் (இருப்பின் ) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  
 
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (தொலைபேசி எண் 0461-2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory