» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும்படை சோதனை: ரூ.92ஆயிரம் பறிமுதல்!
சனி 13, ஏப்ரல் 2024 12:13:09 PM (IST)
கோவில்பட்டி அருகே காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.92 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் சந்திப்பில் கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியுமான தனலெட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 92 ஆயிரத்து 100 ரூபாய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் தாப்பாத்தியை சேர்ந்த பால்பாண்டி என தெரியவந்தது.
இவர் கட்டுமான தொழில் செய்து வருவதும், கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட் வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் சரவணப் பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரை மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.