» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 30, ஜூலை 2021 12:06:08 PM (IST)
தூத்துக்குடியில் சுங்க இலாகா அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை, மற்றும் கூட்டுறவு அதிகாரி வீட்டில் ரூ.125 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் இளங்காமணி மகன் கல்யாணசுந்தரம் (50), இவர் தூத்துக்குடி சுங்க இலாகாவில் கண்காணிப்பளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்ததபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும், பீரோவில் வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப் இன்பெக்டர்கள் முத்துகணேஷ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் கணபதி (85), ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1.25 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.