» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகாரம்: 3 நாடுகளின் தூதர்களை திரும்ப பெற்றது இஸ்ரேல்
வியாழன் 23, மே 2024 4:49:20 PM (IST)
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே நாடுகளின் வெளியுறவுத் தூதர்களை திரும்பப்பெறுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெருமாபாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறியதாவது, ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பாலஸ்தீனுக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும்.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2018 முதல் ஸ்பெயின் பிரதமராக உள்ள சோசியலிஸ்ட் கட்சித் தலைவர் பெட்ரா சான்செஸ் இன்று ஸ்பெயின் பாராளுமன்றத்தில், மே 28 ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரிக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
3 நாடுகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்த நாடுகளில் உள்ள தங்களது வெளியுறவுத் தூதர்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.