» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வரலாற்றில் முதல்முறை: ஈரானின் சாபஹர் துறைமுகம் இந்திய அரசிடம் ஒப்படைப்பு

செவ்வாய் 14, மே 2024 5:26:48 PM (IST)



ஈரானின் சாபஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்காசிய நாடான ஈரானின் சாபஹர் என்ற இடத்தில், ஷாஹித் பெஹெஷ்டி மற்றும் ஷாஹித் கலந்தரி என்ற இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இதில், ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தில் நம் இந்திய அரசு முதலீடுகளை செய்துள்ளது. இதன் வாயிலாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த துறைமுகத்தின் முதல்கட்ட பணிகள் முடிவடைந்து, 2017, டிசம்பரில் திறக்கப்பட்டது.

இந்த துறைமுகத்தின் வழியே, இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு முதல்முறையாக கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.பின், 2018, டிசம்பரில், ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் நிர்வாக பொறுப்பு, மத்திய அரசுக்கு சொந்தமான, 'இந்தியா போர்ட் குளோபல் லிமிடெட்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.

தற்போது, ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நீண்ட கால ஒப்பந்தம், இந்தியா - ஈரான் இடையே கையெழுத்தாகி உள்ளது.ஈரான் சென்றுள்ள நம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனவால், இந்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டார். இந்த தகவலை, நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று உறுதி செய்தார்.

சாபஹர் துறைமுகம்,  இந்தியா - ஈரான் நாடுகளின் வர்த்தக உறவில் முக்கிய பங்காற்றுகிறது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை சமாளிக்க ஈரானுக்கு பேருதவியாக உள்ளது.மேலும், சீனாவின் உதவியுடன் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தின் உதவியின்றி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்தை இந்தியா மேற்கொள்ள உதவி செய்கிறது. வரலாற்றில் முதல்முறையாக, வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory