» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:16:13 PM (IST)

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனுவை ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றின் உத்தரவுகளின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 3 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டதையடுத்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இம்மனுவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை 15 நாட்களுக்குப் பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (Cusecs) வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது.

ஜூலை 30 அன்று நடந்த அவசரக் கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இவ்வுத்தரவை உறுதி செய்தது. இருப்பினும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 158 முதல் 550 கன அடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 3 நிலவரப்படி, கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது.

மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி. ஆகும். ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 4.536 டி.எம்.சி. மிகக் குறைவாகும்.

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு உரிய பங்கினைத் திறக்கத் தவறியதால், வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory