» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரியத் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் இரு அவைகளிலும் நிறைவடைந்தது. கூட்டத்தொடர் முழுவதும், டெல்லியில் மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் மற்றும் ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா வழக்கமான தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், அரசின் போக்கைக் கண்டித்துக் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கியக் கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த விருந்தைப் புறக்கணித்தனர்.

இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்த போதிலும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இத்தேநீர் விருந்தில் பங்கேற்றார். இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் (NDA) எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

சமீபகாலமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி திமுக செயல்படுவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜகவுக்கு திமுக ஆதரவளிப்பதாகத் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்த்தரப்புக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இத்தகைய சூழலில், சபாநாயகரின் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி கலந்துகொண்டிருப்பது தேசிய மற்றும் மாநில அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory