» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி: அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

செவ்வாய் 17, மார்ச் 2026 8:44:19 AM (IST)

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி செய்ததாக, அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு மாணவர்களுக்கு வழங்கி வந்த 6 வெவ்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஒருங்கிணைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஒரே திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது. இதில் 10-ஆம் வகுப்புக்குப் பிந்தைய 11, 12-ஆம் வகுப்புகள், பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமும் அடங்கும்.

இந்நிலையில், மத்திய சமூக நீதி அமைச்சகம் மேற்கொண்ட கள ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 28 கல்வி நிறுவனங்களில், 926 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்றதாகக் கணக்குக் காட்டி, சுமார் ரூ.11 கோடியே 40 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், இந்த உதவித்தொகையைப் பெற்றதாகக் கூறப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல, உண்மையில் நடைமுறையில் இல்லாத 'போலி நிறுவனங்கள்' என்பது தெரியவந்தது. மேலும், சில மூடப்பட்ட கல்வி நிறுவனங்களின் பெயரிலும், அங்கு பயிலாத மாணவர்களின் பெயரிலும் போலி கணக்குகள் தொடங்கிப் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தெரியாமலேயே அவற்றின் பெயரில் நிதியை வரவு வைத்து மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சமூக நீதி அமைச்சகச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, 5 மாநிலங்களைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான தொடர்பு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த மிகப்பெரிய நிதி மோசடியில் தொடர்புடைய நபர்களைக் கண்டறியச் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

RAJKERANMar 18, 2026 - 09:31:48 AM | Posted IP 172.7*****

மோசடி செய்தவர் இவர் என்று உறுதியானால் பாக்க கண் இல்லாமல் ஆயுள் முழுவதும் ஆயுள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

indianMar 17, 2026 - 04:02:31 PM | Posted IP 104.2*****

Very shameful to hear this News. Put them in jail

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory