» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் : ரகுராம் ராஜன் விளக்கம்!

புதன் 9, ஏப்ரல் 2025 11:52:35 AM (IST)

அமெரிக்க-சீன வர்த்தகப் போரில் இந்திய பொருளாதாரத்துக்கு சில சாதகமான சூழல் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் சிறியதுதான். ஆம், இந்த வரிவிதிப்புகளின் மூலம் சில விளைவுகள் ஏற்படும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கும். ஆனால் நமது பொருளாதாரத்தின் தன்மையையும் நமது வளர்ச்சியையும் அது பெரியளவில் மாற்றப் போவதில்லை.

கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இந்தியா தனது பார்வைகளை விரிவுபடுத்தவும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணியை மீண்டும் கையில் எடுக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனான தொடர்புகளை மீண்டும் பார்வையிடவும் இது ஒரு நல்ல நேரம். கூடவே ஜப்பானையும், சீனாவையும் அணுக வேண்டும்.

வர்த்தகங்களிடையே மிகவும் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணம் இது. மேலும் நமது உள்நாட்டு சந்தையின் கவர்ச்சியும், அமெரிக்காவிற்குள் குறைந்த வரி நுழைவுப் புள்ளியாக இருப்பதற்கான சாத்தியக்கூறும் இணைந்து, நாம் காய்களை சரியாக நகர்த்தினால், அதிக முதலீட்டை ஈர்க்க முடியும்.

அத்துடன் நாம் இன்னொரு விஷயத்தையும் செய்தாக வேண்டும், அதாவது இந்தியாவில் முதலீட்டை மிகவும் நட்பானதாக மாற்றுவது, வரிச் சட்டங்களை மேலும் கணிக்கக்கூடியதாக மாற்றி, வரி அதிகாரிகளின் ரெய்டு ராஜ்ஜியத்தைக் குறைப்பது, சூழலை சரியாக பயன்படுத்தி தேவையானதை செய்வது.

இவை அனைத்திலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த வரிகளால் நமது சேவைகள் மற்றும் ஏற்றுமதிகள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு வகையில், நாம் சற்று கூடுதலாக பாதுகாக்கப்பட்டுள்ளோம்.

இந்திய ஏற்றுமதியாளர்கள் கிழக்கு ஆசியாவில் சந்தைகளைத் தேடலாம். ஆனால் நிச்சயமாக உள்நாட்டு சந்தையும் ஓரளவு ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அமெரிக்காவிற்குள் நுழைய மறுக்கப்பட்ட சீன உற்பத்தி சந்தை, இந்தியாவை நாட வாய்ப்புள்ளது.

ஆனால் வரிகள் இப்படியே நீடித்தால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உலகளாவிய மந்தநிலையை எதிர்கொள்வது உறுதி. மற்ற சில நாடுகளைப் போலல்லாமல் இது நமக்கு ஒரு சரியான தருணம். ஆனால் நாம் உண்மையில் நமது நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்” இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன., ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. இந்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு அமெரிக்கா 24 மணி நேர கெடு விதித்தது. நேற்றுடன் கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory